AWARD RECIPIENTS FOR 2009 Lifetime Achievement Award Recipient Iravatham Mahadevan
இயல் விருது ஐராவதம் மகாதேவன்
ஐராவதம் மகாதேவன் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார். இந்திய ஆட்சிப் பணியில் 33 வருடங்களும், தினமணி இதழின் ஆசிரியராக நாலு வருடங்களும் பணி புரிந்தார். இவருடைய தினமணி காலத்தில் தமிழ் மொழியின் பரவலான எழுத்துபாவனை தூய தமிழ்ச்சொற்களின் அறிமுகத்தால் பெரும் மாற்றமடைந்தது. தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து இவர் நடத்திய நீண்ட கால ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச புகழ் இவரை தேடி வந்தது.
கல்வெட்டு ஆராய்ச்சிகளில் இவர் காட்டிய அர்ப்பணிப்பும் உழைப்பும் தொல்தமிழ் குறித்தும் பண்பாடு, வரலாறு குறித்தும் தீர்க்கமான முடிவுகளை எட்ட உதவியிருக்கிறது. இவர் நாம் வாழும் காலகட்டத்தின் மாபெரும் ஆய்வாளர் என்பதை பல்துறை அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். பிராமி எழுத்துமுறை தமிழகத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பரவியது என்பதையும் அந்த நூற்றாண்டிலேயே எழுத்தறிவு தோன்றியது என்பதையும் ஆராய்ச்சி மூலம் நிறுவியிருக்கிறார். அரசவை, மேனிலை மக்கள், வழிபாட்டு தலங்கள் மத்தியில் மட்டுமே எழுத்தறிவு என்ற நிலை இல்லாமல் எல்லா நிலைகளிலும் எல்லா மக்களிடையேயும் எழுத்தறிவு காணப்பட்டது என்பது இவருடைய ஆராய்ச்சியிகளின் முக்கியமான முடிவு.
இவர் எழுதியுள்ள நூல்கள் The Indus Script : Texts, Concordance and Tables (1977) Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003)
இவருடைய ஆராய்ச்சிகளுக்காக இந்திய அரசு இவருக்கு 2009 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழுக்கு ஆற்றிய சேவைக்காக திரு ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான 2009ம் ஆண்டு இயல் விருதை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.